சகிப்புத்தன்மை குறித்தும், தாராளம் குறித்தும் பேச வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இந்திய நாட்டில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் எல்லா வகையான அடக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு, மிகவும் பின்தங்கிய சமுதாயமாக வாழ்ந்து வரும்  சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அவ்வப்போது இங்கே சகிப்புத்தன்மை குறித்தும், தாராளம் குறித்தும் சிலர் பாடம் நடத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்களின் சகிப்புத்தன்மையும் தாராளமும்

நேர்மையற்ற மனிதர்களின் எதிர்வினைகளை சகிப்பது, அவர்களை அறியாத மனிதர்களாக கருதி, அவர்களிடம் தாராளமாக நடப்பது இவ்விரண்டும் இஸ்லாம் இவ்வுலகில் தோன்றிய ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்களிடம் இருந்து வரும் பண்புகளாகும்.

பொறுமையை இஸ்லாம் அதிகம் போதிக்கிறது. பொறுமை குறித்து ஏராளமான சொற்கள் குர்ஆனிலும் , நபிமொழிகளிலும் காணப்படுகின்றன.

ஆத்திரத்தில் அடித்து வீழ்த்துபவன் வீரன் இல்லை என்கிறது இஸ்லாம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ  رواه البخاري ومسلم

அதற்காக கொலை ஆயுதங்களுடன் வருபவர்களிடம் கழுத்தை தந்து விட்டு அடிபட்டு சாக வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல..

மாறாக கோபம் என்ற பெயரில் மற்றவரை துவம்சம் செய்யக் கூடாது என்பதே அதன் பொருளாகும்

ஆனால் வேதனைக்குரிய விஷயம் சகிப்புத்தனமும், விட்டுக் கொடுத்து நடக்கும் தாராளப் பண்பும் நாட்டில் சிறுபான்மை சமுதாயமாக வாழ்பவர்களிடம் மட்டுமே இங்கே  அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது.

முஸ்லிம்களின் சகிப்புத்தனம்

அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறுபான்மை சமுதாயமாக வாழும் காலத்தில் மட்டுமல்ல.. அதிகாரமும், வலிமையும் பெற்று பெரும்பான்மை சமுதாயமாக வாழும் காலத்திலும் சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும் என்கிறது இஸ்லாம்.

மக்காவில் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்த காலத்தில் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தார்கள் என்பது முக்கியமல்ல.. மதீனாவில் பெரும்பான்மையாகவும், அதிகார வர்க்கமாகவும் வாழ்ந்த காலத்தில் சகிப்புத்தனமாக நடந்தார்கள் என்பதே இங்கே முக்கியமானதாகும்.

முஸ்லிம்களின் மத சகிப்புத்தனம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனா நகர முஸ்லிம் அரசு 10 வருட காலத்தில் 80 யுத்தத்தங்களை சந்திக்கிறது.

அந்த 80 யுத்தங்களும் முஸ்லிம்களின் வளர்ச்சியை சகிக்க முடியாமல் எதிரிகளால் ஏவிவிடப்பட்ட யுத்தங்களே.

சராசரியாக வருடத்திற்கு சுமார் 10 யுத்தங்களை முஸ்லிம்கள் சந்தித்து வந்த நிலையில் போர்க்கள ஆத்திரங்களை நாட்டில் வாழ்ந்த சிறுபான்மை மக்களிடம் முஸ்லிம்கள் காட்டியதில்லை.

அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றலாம் என்பதும், விரும்பினால் மற்றவர்கள் இஸ்லாத்தை ஏற்கட்டும் என்பதும் தான்  முஸ்லிம்களின் கொள்கையாக இருந்தது.

قال الله تعالي: لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 109:6

قال الله تعالي: فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ 18:29

ஏனெனில், மக்கள் பல மதத்தினராகவும், பல கொள்கையாளர்களாவும் தான் வாழ்வார்கள். இதுவே இறைவனின் நியதி என்பது முஸ்லிம்கள் கொள்கையளவில் ஒப்புக் கொண்டதாகும்.

قال الله تعالي: وَلَوْ شَاءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ أُمَّةً وَاحِدَةً وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ 11:118

மக்களுக்கு இஸ்லாத்தை ஏற்பதற்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்கள் ஏற்றால் மகிழ்வது. ஏற்காவிட்டால் மனதார அவர்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடன் பழகுவது என்றே வரலாற்றில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள்.

பின்வரும் இறைமறை வசனம் அவர்களின் இவ்வெண்ணத்திற்கு காரணம்.

قال الله تعالي: يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً 4:1

மதம், இனம், மொழி, நிறம், பணம், நிலம் இவற்றுக்கு அப்பாற்பட்டு மனிதர்கள் எல்லோரும் ‘ஒரு தாய் பிள்ளைகள்’ என்ற இஸ்லாத்தின் அறிவிப்பே இஸ்லாமியர்களின் மத சகிப்புத்தன்மைக்கு அடிப்படை காரணமாகும்.

قال رسول الله صلي الله عليه وسلم : وَالنَّاسُ بَنُو آدَمَ وَخَلَقَ اللَّهُ آدَمَ مِنْ تُرَابٍ رواه الترمذي
சமூக மேம்பாட்டில் சகிப்புத்தனம்

நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம் மேம்பாட்ட சமுதாயமாக வாழ்வதை முஸ்லிம்கள் எப்போதும் நெகிழ்வான கண்கொண்டே பார்த்துள்ளார்கள்.

இதற்காக எந்த தடையையும் முஸ்லிம்கள் ஏற்படுத்தியதில்லை. இதனால் தான் அவர்கள் முஸ்லிம்களின் ஆட்சித்தலைவருக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் வலிமையாக திகழ்ந்தார்கள்.

யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு கடன் கொடுத்த நிகழ்வு இதற்கு உதாரணம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلَاثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ
وَقَالَ يَعْلَى حَدَّثَنَا الْأَعْمَشُ دِرْعٌ مِنْ حَدِيدٍ وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ وَقَالَ رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ  رواه البخاري

இந்நிகழ்வில் சில படிப்பினைகள் உலக மக்களுக்கு உண்டு.

நபி (ஸல்) அவர்கள் தான் இஸ்லாமிய அரசின் ஆட்சித் தலைவர்.

நாட்டில் ஏராளமான செல்வந்தர்கள் இருக்கவே செய்தார்கள். பணத்தை மட்டுமல்ல .. அவர்கள் இறைத்தூதருக்காக ஆத்மாக்களையும் தந்தவர்கள். தருபவர்கள்.

அவர்களிடம் கேட்டிருந்தால் தாமதமின்றி தந்திருப்பார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் யூதனிடம் கடன் வாங்கினார்கள்.

காரணம்

1. பிற மத்தவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும் . அவர்களை புறக்கணிக்கக் கூடாது.

2. இஸ்லாமிய ஆட்சியில் ஆட்சித்தலைவருக்கே கடன் தரும் அளவு பொருளாதார வலிமையாக வாழ்ந்தார்கள் யூதர்கள்.


மற்றவர்களின் மத உணர்வுகளை மதித்தல் 

மற்றவர்களின் மத உணர்வுகளை மதித்து வாழும் படி கட்டளையிட்டு அதன் வழியில் நின்று வாழ்ந்து காட்டினார்கள் இறைத்தூதர் நபி (ஸல்). 
புகாரியில் இடம் பெறும் பின்வரும் நிகழ்வு இதற்கு ஆதாரம்

حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي
سَلَمَةَ وَعَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
اسْتَبَّ رَجُلَانِ رَجُلٌ مِنْ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنْ الْيَهُودِ قَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى الْعَالَمِينَ فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ فَرَفَعَ الْمُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ فَلَطَمَ وَجْهَ الْيَهُودِيِّ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُسْلِمَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَأَخْبَرَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُخَيِّرُونِي عَلَى مُوسَى فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَأَصْعَقُ مَعَهُمْ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ فَإِذَا مُوسَى بَاطِشٌ جَانِبَ الْعَرْشِ فَلَا أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي أَوْ كَانَ مِمَّنْ اسْتَثْنَى اللَّهُ  رواه البخاري

பிற மத பண்டிகைகள் மதிக்கப்பட்டன.

ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்பதாக சொன்ன பொழுது அதற்கான காரணத்தை வினவி, அந்நாளில் தமது தோழர்களையும் நோற்குமாறு ஏவினார்கள் அண்ணல் நபி (ஸல்)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَالْيَهُودُ تَصُومُ عَاشُورَاءَ فَقَالُوا هَذَا يَوْمٌ ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ أَنْتُمْ أَحَقُّ بِمُوسَى مِنْهُمْ فَصُومُوا    رواه البخاري

முஸ்லிம்களின் தாராளம்
மனிதர்கள் எல்லோரிடமும் தாரளமாக நடக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல்

வரலாற்றிலும், யதார்த்த வாழ்விலும் முஸ்லிம்களின் தயாளமும் தாராளமும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகும்.


வரலாற்றில் எதிரிகளிடம் கூட முஸ்லிம்கள் தாராளமாகவும், தயாளமாகவும் தான் நடந்துள்ளார்கள்.

.பத்ருப் போரில் முஸ்லிம்களின் நீர் தடாகத்தில் எதிரிகள் தண்ணீர் அருந்த வந்த போது அவர்களை தடுக்க வேண்டாம்  என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

وأقبل نفر من قريش حتى وردوا حوض رسول الله صلى الله عليه وسلم فيهم حكيم بن حزام ، فقال رسول الله صلى الله عليه وسلم : » دعوهم
رواه البيهقي في دلائل النبوة

பஞ்ச காலத்தில் மக்காவுக்கு நிவாரணப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

وقد روي محمد بن الحسن صاحب ابي حنيفة ومدون مذهبه : أن النبي صلي الله عليه وسلم: بعث الي مكة مالا لما قحطوا ليوزع علي فقرائهم
( السير الكبير)

இதற்கெல்லாம் அப்பால் எதிரிகளுக்கு போர்க்களங்களில்  மருத்துவ உதவிகள் செய்த தாராளங்களும் இஸ்லாமிய வரலாற்றில் உண்டு.

சிலுவை யுத்தங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சிலுவை யுத்தங்களில் உடனே நினைவுக்கு வருபவர் மாவீரன் சுல்தான் ஸலாஹுத்தின் அய்யூபி

வீரத்தில் உச்சத்தில் நின்ற அவர் தாராளத்திலும் உச்சத்தில் நின்றவர் மிகையில்லை.

சிலுவைப் போர் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக போரில் கலந்து கொண்ட இங்கிலாந்து மன்னருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனது.

படுத்த படுக்கையில் வீழ்ந்தார் அவர். எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை.

விஷயத்தை கேள்விபட்ட சுல்தான் ஸலாஹுத்தின் அவர்கள் அரசாங்க மருத்துவரை அனுப்பி வைத்து அவருக்கு வைத்தியம் பார்த்தார்கள்.

வரலாறு நெடுக காணப்படும் இத்தகைய தாராளங்கள் இன்றளவும் முஸ்லிம்களிடம் காணப்படவே செய்கின்றன.

முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்திரிப்பதற்கு நடக்கும் பெருமுயற்சிக்கு மத்தியில் அவ்வப்போது அவை பகிரங்கப்படவும் செய்கின்றன.

தமிழக முஸ்லிம்களின் தாராளம்

இங்கே நமது தமிழகத்தில் முஸ்லிம் இயக்கங்களின் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் எல்லா மதத்தினருக்கும் தான் தரப்படுகின்றன. எந்த பாரபட்சமும் அதில் காட்டப்படுவதில்லை.

சமீப கால தமிழக வரலாற்றில் நெஞ்சை நெகிழச் செய்திடும் முஸ்லிம்களின் தாராளம் ஒன்றை இவ்விடம் கூறியாக வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடந்த சம்பவம் அது.

2006 ம் ஆண்டு தென்காசியில் ஒருவர் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதனை தொடர்ந்து 2007 மார்ச் இல்  ஒரு முஸ்லிம் அமைப்பின் மாவட்டத் தலைவர் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்.

2007 ம் ஆண்டு ஆகஸ்டு 14 ந்தேதி வழக்கில் ஜாமினில் வெளிவந்த முஸ்லிம் வாலிபர்கள் நடுரோட்டில்

இந்துவவாதிகளால் வழிமறிக்கப்பட்டார்கள்.  அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

இறந்த இந்துத்துவாதிகளை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அச்சமயத்தில் முஸ்லிம் அமைப்பினர் தங்களது ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல முன்வந்தார்கள். எடுத்துச் சென்றார்கள்.

அச்சமயம் எல்லா பத்திரிக்கைகளிலும் வெளிவந்த இச்செய்தி முஸ்லிம்கள் எதிரிகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியது.

2004 சுனாமியின் போதும், குஜராத் பூகம்பத்தின் போதும் தமிழக  முஸ்லிம்களின் உதவிகளும், களப்பணிகளும் எல்லோராலும் பாராட்டப்பட்டன.

இத்தனைக்கும் இந்த மனிதநேய உதவிகளை யாருடைய பாராட்டுக்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் முஸ்லிம்கள் செய்யவில்லை. அல்லாஹ்விற்காகவே செய்கிறார்கள்.

தாடியும், தொப்பியும் தர்ம குணத்தின் அடையாளம்

தாடி வைத்தவரையும், தொப்பி அணிந்தவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க இங்கே உள்ள  அரசுகளும், ஊடகங்களும் தீவிரமாக முயன்றாலும் சாதாரண எளிய மக்களுக்கு தாராளமானவர்களாகவும், நல்லவர்களாகவும் தெரிவது இந்த தாடி வைத்த முஸ்லிம்களும், தொப்பி அணிந்த முஸ்லிம்களும் தான்.


நான்கு நபர்கள் நிற்குமிடத்தில் ஒருவர் முஸ்லிமாக தெரிந்தால் தர்மம் எடுப்பவர்கள் கூட அவரிடம் சென்று தான் கேட்பார்கள். இது நடைமுறை வாழ்வில் நாம் அனுபவிக்கக்கூடிய ஒன்று.

ஓர் அற்ப பிரச்சினைக்காக இந்த தயாளங்களை மறந்து விட்டு அபத்தங்களையும், காழ்ப்புணர்வுகளையும் அள்ளி வீசுவதை நாம் என்னவென்று சொல்வது?

இரண்டு கண்கள் இருப்பவனுக்கு  வைகறை வெளிச்சம் தெளிவாக தெரியும்






Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.